பத்து மாதம் சுமந்து
பாசத்தோடு பெறுவாள்!
முத்த மழையைப் பொழிவாள்!
முத்தெனக் கொஞ்சி மகிழ்வாள்!
கண்ணே, மணியே என்பாள்
கண்ணுள் வைத்துக் காப்பாள்!
மண்ணில் இறைவன் படைத்த
மாபெரும் தெய்வம் அன்னை!
தூக்கித் தோளில் சுமப்பாள்!
தூக்கமும் பசியும் மறப்பாள்!
ஊக்கம் தந்து வாழ்வில்
உயரும் வழியைச் சொல்வாள்!
களிப்புடன் நிலவைக் காட்டிக்
கனிவுடன் சோறு ஊட்டிப்
பளிச்செனச் சிரிக்க வைப்பாள்!
பலவித கதைகள் சொல்வாள்!
மடியை மெத்தையாக்கி
மகிழ்வுடன் தூங்க வைப்பாள்!
துடித்து அழுதிடும்போது
தவித்துப் போவாள் அன்னை!
பசியால் அழுகை வந்தால்
பாலை அன்புடன் தருவாள்!
பகலும் இரவும் உழைப்பாள்!
படிக்க வைத்து மகிழ்வாள்!
தன்னை அழித்துக் கொண்டு
என்னை வளர்க்கும் அன்னை
என்றும் எனது தெய்வம்!
என்னுள் இயங்கும் இதயம்!
- நா.இராதாகிருட்டிணன்.
தாயைத் துதி!
தாயைத் துதி நீ
தாயைத் துதி!
தாழ்ந்து பணிந்து
தாயைத் துதி!
தூய அன்புத்
தாயைத் துதி!
தூக்கி அணைக்கும்
தாயைத் துதி!
ஓயா இரக்கத்
தாயைத் துதி!
ஊட்டி வளர்க்கும்
தாயைத் துதி!
காயாக் கருணைத்
தாயைத் துதி!
காக்கும் கடவுள்
தாயைத் துதி!
- தளவை இளங்குமரன்