அருமை யுடைய பொருளுடையார் தங்கண்
கரும முடையாரை நாடார் - எருமைமேல்
நாரை துயில்வதியும் ஊர! குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்றா ரில். (பாடல்-23)
எருமையின் மீது, நாரை தூங்குகின்ற மருதநிலத் தலைவனே, குளத்தினைத் தோண்டி, (அதனிடத்தில் உறைவதற்குத்) தேரை இருக்குமிடத்தைத் தேடிச் செல்வா ரிலர். (அதுபோல), பெறுதற்கருமையை உடைய பொருளினை உடையார் தம்மிடம், காரியம் உடையவர்களைத் தேடுதலிலர். (க.து.) பொருளுடையாரிடம் கருமம் உடையார் தாமே தேடி வருவர். "குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றா ரில்' என்பது பழமொழி.