இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம்
வசையன்று வையத் தியற்கை அஃதன்றிப்
பசைகொண் டவனிற்கப் பாத்துண்ணா னாயின்
நசைகொன்றான் செல்லுலக மில். (பாடல்-24)
தன்னால் கொடுக்கக் கூடியவற்றைக் கொடுத்தலும், கூடாதவற்றை இல்லை யென்று கூறுதலும், ஒருவனுக்குக் குற்றமாகாது, அவை பெரியோர்களது செயல்களாம். அவ்வியற்கையின்றி, கொடுப்பான் என்று மனதின்கண் விரும்பி நின்றான் நிற்க, தன்னிடத்துள்ளதைப் பகுத்துக் கொடுத்து உண்ணாதவனானால், நிற்பானது விருப்பத்தைக் கெடுத்தானாதலால், செல்லுகின்ற மறுமை உலகத்தின்கண் இன்பம் அடைதல் இல்லை. (க.து.) தன்னிடத்துள்ளதைக் கொடாதவனுக்கு மறுமை யுலகத்தின்கண் இன்பம் இல்லை. "நசை கொன்றான் செல்லுலகம் இல்' என்பது பழமொழி.