தீமைக்கு நன்மை செய்தல்
கறுத்து ஆற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்து ஆற்றிச் சேறல்புகழால் - ஒறுத்து
ஆற்றின் வான்ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்நோன் றிடவரும் சால்பு. (பாடல்-19)
வானளவு உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே!, ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம், (ஆகையால்) சினத்தின்கண் மிக்குத் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை, அவர் தீச் செயல்களைப் பொறுத்து அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழாகும். கோபித்துத் தாமும் தீய செய்கைகளைச் செய்தால் அதனால் புகழ் உண்டாதல் இல்லை. (க-து) தீங்கு செய்தார்க்கு நன்மை செய்தல் வேண்டும். "தான் தோன்றிட வரும் சால்பு' என்பது பழமொழி. "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்' என்பது இக்கருத்துப் பற்றி எழுந்த திருக்குறள்.