பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார் - போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம்செய் வாரே
கழிவிழாத் தோளேற்று வார். (பாடல்-13)
பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்கு, போர் ஏற்பட்டவுடன் அதற்குதவாது சென்ற பால்போன்ற உடம்பினையுடைய பலராமனைப் போல, வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு, மிகத் துன்புறுத்தும் போரின்கண் கலத்தலிலராய், அவர் உயிரைப் பகைவரால் போகச் செய்து, (பின்னர்) இறந்தார் பொருட்டு நீத்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள், கழிந்த விழாவினை உடைய ஊரில் தம் புதல்வற்கு விழாக்காட்டும் பொருட்டு அவரைத் தோள்மீது சுமப்பாரோடு ஒப்பர். "கழிவிழாத் தோளேற்றுவார்' என்பது இதில் வந்த பழமொழி.