தமிழ்மணி
பழமொழி நானூறு
நறு நாற்றத்தால் பிறவற்றை வென்று இயற்கை மணம் வீசுகின்ற கூந்தலை உடையாய்!, நாயோடு நட்புச் செய்தால், சிறந்த உணவாகிய முயல் தசையை உண்பிக்கச் செய்யாதோ?
தாம்நட் டொழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா
யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும்
கானட்டு நாறுங் கதுப்பினாய்! தீற்றாதோ
நாய்நட்டால் நல்ல முயல்? (பாடல்-14)
நறு நாற்றத்தால் பிறவற்றை வென்று இயற்கை மணம் வீசுகின்ற கூந்தலை உடையாய்!, நாயோடு நட்புச் செய்தால், சிறந்த உணவாகிய முயல் தசையை உண்பிக்கச் செய்யாதோ? (உண்ணச்செய்யும் அதுபோல), செல்வத்தால் மிகுந்த தாம், நண்பு பூண்டு ஒழுகுவதற்கு, (நம்மைஒப்ப) இவரும் செல்வத்தால் தகுதியுடையவரா என்றாராய்தல் வேண்டா, வறுமையால் மிக்கவர் நட்பேயானாலும், அவர் நட்பைப் பெறவேண்டும். (க-து.) செல்வந்தர் வறுமையுடையாரோடும் நட்புச் செய்தல் வேண்டும். "தீற்றாதோ நாய் நட்டால் நல்ல முயல்' என்பது இதில் வந்த பழமொழி.