பெங்களூர், ஜூலை 12: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது 49-வது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை ரசிகர்களுடன் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார்.
கன்னட திரையுலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் ராஜ்குமார். அவரது 3 மகன்களில் மூத்தவர் சிவராஜ்குமார். இவரும் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.
இவர் தன்னுடைய பிறந்தநாளையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடிகர் ராஜ்குமார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் ரசிகர்கள்கொண்டு வந்த கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
உற்சாகத்திலிருந்த ரசிகர்கள் அவருக்கு மலர் கிரீடம், ஆளுயர ரோஜா, மல்லிகை மாலைகளை அணிவித்தனர்.
பிறகு தனது தாய் பார்வதம்மாவிடம் ஆசிபெற்ற அவர், மனைவிக்கு கேட் ஊட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ரசிகர்கள் என்னை இந்தளவிற்கு விரும்புவதற்கு நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
எனது தந்தை நடிகர் ராஜ்குமார் மிகப்பெரிய சக்தி. அவரோடு என்னை மட்டுமின்றி யாரையும் ஒப்பிட முடியாது. அவரின் புகழில் வெறும் 10 சதவிகிதம் புகழை மட்டுமே என்னால் பெற முடிந்துள்ளது. அன்னாரது நல்லாசி எனக்கு என்றைக்கும் உண்டு என்றார்.