மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்(60) பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.
1399-ம் ஆண்டுமுதல் 1950 ஆண்டுவரை மைசூரை ஆண்டவர்கள் உடையார் பரம்பரையை சேர்ந்த மன்னர்கள். அவர்களின் உடையார் பரம்பரையின் கடைசி மன்னரான ஜெயசாம்ராஜ் உடையாரின் இரண்டாவது மனைவியான மகாராணி திரிபுரசுந்தரி அம்மணியின் ஒரே மகனாக 1953 ஆண்டு பிப். 23-ம் தேதி மைசூரில் பிறந்தவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார். மைசூரில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வியை மைசூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவரான நரசிம்மராஜ உடையார் பல்கலைகழக கிரிக்கெட்டின் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். 1976-ம் ஆண்டு பிரமோததேவியை மணந்து கொண்ட அவருக்கு குழந்தைகள் எதுவுமில்லை. புகழ்பெற்ற தசரா திருவிழாவில் மன்னர் ஜெயசாம்ராஜ் உடையார் இறந்த பிறகு, அவரின் பொறுப்புகளை 1974 ஆண்டு முதல் ஏற்று நரசிம்மராஜ உடையார் நடத்தி வந்தார். மைசூர் மக்களவை தொகுதியில் 4 முறை காங்கிரஸ், பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 முறை தோல்வி அடைந்துள்ளார். அண்மையில் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். செவ்வாய்க்கிழமை பெங்களூரு அரண்மனையில் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த அவருக்கு பிறப்பகல் 1.40 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் மாரடைப்பால் இறந்ததாக பிற்பகல் 3.30 மணியளவில் மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அவரது உடலுக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் கர்நாடக உள்துறை அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், யு.டி.காதர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து கர்நாடகத்தில் செவ்வாய், புதன்கிழமைகளின் துக்கதினமாகவும், புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவும் ஆம்புலன்ஸ் வேன் மூலம் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், புதன்கிழமை மைசூரில் அந்த பரம்பரை மன்னர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட மனுவனத்தில் இறுதி சடங்கு நடைபெறுமென தெரிகிறது.