கல்வி, பொருளாதாரத்தில் தலித் மக்கள் பின்தங்கியுள்ளதற்கு மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸை காரணம் என மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சியில் அவர் பேசியது:
காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே தலித்துகள், அம்பேத்கர் ஆகியோருக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்போதும் அவமதித்தே வந்துள்ளது. வாழ்ந்த காலத்திலேயே அம்பேத்கரை தேர்தலில் தோல்வி அடையச் செய்த கட்சி காங்கிரஸாகும்.
முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். ஆனால், பிரசாரத்துக்காக அவர் அம்பேத்கரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்கிறார். இது அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சியினர் செய்யும் அவமானமாகும். இதற்கு சித்தராமையா உள்ளிட்ட அக் கட்சியினர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
பாஜக கூட்டணியில் மத்தியில் ஆட்சி செய்த வி.பி.சிங், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி கெளரவித்தார். அதற்கு முன்பு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸார், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து ஒருபோதும் யோசித்ததில்லை.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அம்பேத்கருக்கு உரிய கெளரவத்தையும், மரியாதையையும் செலுத்தி வருகிறார். தலித் மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ளதற்கு மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸை காரணம்.
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அனைத்து மொழிகளிலும் அச்சிட்டு, அனைவருக்கும் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் ஷோபா கரந்தலஜே, முன்னாள் அமைச்சர் ராமசந்திர கெளடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.