பெங்களூரு ஜெயநகர் கித்தூர் ராணி சென்னம்மா விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை (டிச.9) வாக்காத்தான் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமர்த்தனம் அறக்கட்டளை நிறுவனர் மஹந்தேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு ஜெயநகர் சென்னம்மா விளையாட்டுத் திடலில் டிச.9 பிற்பகல் 3 மணியளவில் வாக்காத்தான் நடைபெற உள்ளது. வாக்காத்தானில் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர்.
வாக்காத்தானைத் தொடக்கிவைக்க, சாலதமரதிம்மக்கா, நடிகர் உபேந்திரா, மாமன்ற உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். வாக்காத்தானையொட்டி, ஜெயநகர் சென்னம்மா விளையாட்டுத் திடலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை போக்குவரத்து போலீஸார் வழங்கியுள்ளனர். பசுமையை வலியுறுத்தி நடைபெறும் வாக்காத்தானுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.