பெங்களூரில் டிச.18-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில கோழி வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி: தேசிய கோழி வளர்ப்பு கூட்டுத் திட்டத்தின்கீழ், கர்நாடக மாநில கோழி வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பில் பெங்களூரு, ஹெசரகட்டாவில் உள்ள மாநில கோழிப் பண்ணையில் டிச.18 முதல் 23-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கான கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர், இருப்பிடச் சான்றிதழ், அண்மையில் எடுத்த இரு பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் டிச.18-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நேரில் வரலாம்.
பயிற்சிக் காலத்தின் போது, பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். தங்கும் வசதி தேவைப்பட்டால் தினமும் ரூ.25 கட்டணம் செலுத்தி அறை பெறலாம். பயிற்சி முகாமில் 40-50 பேர் பங்கேற்பதற்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். இந்த சிக்கலைத் தவிர்க்க, துணை இயக்குநர், தேசிய கோழி வளர்ப்பு கூட்டுத் திட்டம், மாநில கோழிப் பண்ணை, ஹெசரகட்டா, பெங்களூரு என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-28466093 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம்.