பெங்களூரில் உள்ள லட்சுமி தேவியின் நினைவிடம் சுற்றுலாத் தலமாக்க வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று மேயர் ஜி.பத்மாவதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
பெங்களூரு மாநகரை உருவாக்கிய மன்னர் கெம்பேகெளடரின் பிறந்த நாள் விழாவை மாநில அளவில் ஜூன் 27- இல் அரசு விழாவாக கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
கெம்பேகெளடர் தனிப்பட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல. அவர் அனைவருக்கும் சொந்தமானவர். கெம்பே கெளடருக்கு ஆண்டுதோறும் பெங்களூரு மாநகராட்சி சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வந்தது. விழாவில் அவரது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. அவரை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமை.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கெம்பேகெளடரைப் பற்றிய ஆய்வுகள் செய்வதற்கான மையம் அமைக்க, ரூ. 50 கோடியை அரசு ஒதுக்கித் தந்துள்ளது. இதன் மூலம் கெம்பேகெளடரைப் பற்றிய அனைத்து தகவலும் சேகரிக்க உதவும். கெம்பேகெளடரின் மருமகள் லட்சுமிதேவி பெங்களூரை உருவாக்க தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.
அந்த தியாகியின் வெண்கலச்சிலையை பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வளாகத்தில் ஆகஸ்ட் முதலாவது வாரத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளோம். சிலை திறப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாடப்படும். லட்சுமி தேவியின் நினைவிடத்தை சுற்றுலாத் தலமாக்க வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.