பெங்களூரில் உள்ள விதான செளதா கட்டடத்தில் மக்கள் பட்ஜெட் கண்காட்சியை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார்.
முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 12 பட்ஜெட்களின் முக்கிய அம்சங்கள், 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வெளியான செய்திகள், கருத்துப்படங்கள், தலையங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட் மூலம் அறிமுகம் செய்த அன்னபாக்கியா, இலவச பால், கல்வி உதவித்தொகை திட்டம், இலவச வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து நாளிதழ்களின் பார்வைகள் அடங்கிய செய்திக் கட்டுரைகள், கருத்துப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.மார்ச் 28-ஆம் தேதி வரை காட்சிப்படுத்தப்படவிருக்கும் இந்த கண்காட்சியை முதல்வர் சித்தராமையா பார்த்து ரசித்தார். பட்ஜெட் குறித்து ஒருசில பழைய நினைவுகளை தனது சகாக்களிடம் பகிர்ந்து கொண்டார். மக்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ள 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த முக்கிய அம்சங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த நிகழ்ச்சியில் சட்ட மேலவை ஆளுங்கட்சி கொறடா ஐவான் டிசெளஜா, செய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் விஷுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.