பெலகாவி சுவர்ண செளதாவை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ணசெளதாவில் திங்கள்கிழமை தொடங்கியது.
அப்போது, தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து கடந்த சில நாள்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் திங்கள்கிழமை ஊர்வலமாக சென்று சுவர்ணசெளதாவை முற்றுகையிட்டு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் சங்கத் தலைவர் ரவீந்திரா உள்ளிட்ட சிலரை நீர்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர், மருத்துவர்களுடன் முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்.
இதேபோல், சுவர்ண செளதாவை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகளும், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினரும் ஈடுபட்டனர்.