இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து, வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்துக்குள்பட்ட ராயபாக வட்டம் தெய்வாபுராஹட்டியைச் சேர்ந்தவர் மல்லப்பா கெய்க்வாட் (32). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர், அவர்கள் தப்பிச் சென்றனர்.
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று, மல்லப்பாவின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து ராயபாகா போலீஸார் நடத்திய விசாரணையில், நிலத்தகராறில் முன் விரோதம் காரணமாக மல்லப்பா கெய்க்வாட் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.