எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விரைவில் கொண்டாட கர்நாடக மாநில அதிமுக (புரட்சித் தலைவி அம்மா- அம்மா அணி) எம்ஜிஆர் இளைஞர் அணி தீர்மானித்துள்ளது.
பெங்களூரு திலக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில், அணியின் மாநிலச் செயலர் ஆர்.அன்புவேல் தலைமையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்துள்ள அதிமுக ஆட்சியை அவரது வழியில் நடத்திவரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டு தெரிவிப்பது,
கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை கர்நாடகத்தில் கொண்டாடுவது, விழாவுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அழைப்பது, ஜெயலலிதா அறிவித்த நிர்வாகிகளை நீக்கியதாக அறிவிப்பு வெளியிட்டு வரும் டிடிவி தினகரன், வா.புகழேந்தி ஆகியோருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் மாநில அவைத்தலைவர் கே.முனுசாமி, ஜெயலலிதா பேரவை செயலர் பி.சுப்பிரமணி, முன்னாள் செயலர் கே.ராஜசேகர், மாணவர் அணிச் செயலர் எம்.நெடுஞ்செழியன், இலக்கிய அணிச் செயலர் ஓம்சக்தி ஜெயபால், பெங்களூரு மாவட்ட அவைத்தலைவர் என்.கே.காசிராஜ், தலைமைபொதுக்குழு உறுப்பினர்கள் எம்.மஞ்சுளா, எம்ஜிஆர் சம்பா, டி.சந்திரசேகர், இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.குமார், ஜெய நகர் தொகுதிச் செயலர் தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.