பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட 198 வார்டுகளிலும் சிதிலமடைந்துள்ள கட்டடங்களை அடையாளம் கண்டு, அறிக்கை அளிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்று மேயர் ஆர்.சம்பத்ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு, ஈஜிபுராவில்எரிவாயு உருளை வெடித்ததில் இடிந்துவிழுந்த 2 மாடி கட்டடத்தை திங்கள்கிழமை அவர் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
சிதிலமடைந்துள்ள கட்டடங்களை அடையாளம் கண்டு, அதுகுறித்து அறிக்கை அளிக்கும்படிஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக, ஏழைகள் வாழக் கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். சிதிலமடைந்துள்ள கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கி, 24.75 சதவீதத் திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இதற்கு முன்பும் சிதிலமடைந்த வீடுகள் கண்டறியப்பட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, மீண்டும் ஒருமுறை சிதிலமடைந்த கட்டடங்கள் கண்டறியப்படும்.
ஈஜிபுராவில் அடிக்கடி வீடுகள் இடிந்துவிழும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார் அவர்.
இதையடுத்து, சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், செய்தியாளர்களிடம் கூறியது:-
ஈஜிபுராவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் அளிக்கப்படும்.
இந்தச் சம்பவத்தில் உயிரோடு மீட்கப்பட்டுள்ள குழந்தை சஞ்சனாவின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும். கட்டடம் சமையல் எரிவாயு உருளை வெடித்து நடந்ததா? அல்லது கட்டடம் இடிந்து நடந்ததா? என்பதை ஆராய்ந்துஅறிக்கைஅளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.