மதக் கலவரங்களை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை மக்களே தண்டிப்பார்கள் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மக்கள் மனதில் மத உணர்வுகளைத் தூண்டுவோர், சமுதாயத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போரை மக்களே தண்டிப்பார்கள்.
இதற்கு போலீஸார் தேவையில்லை. பாஜகவினரையும் போலீஸார் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. சமுதாயத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீரழித்து, மற்றொரு சமுதாயத்தின் மீது பகைமையை விதைப்பது பாஜகவினர்தான்.
பாஜகவினரின் இந்த தந்திரத்தை மக்கள் நிராகரிப்பார்கள். பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தோல்விகளை மக்கள் முன்வைப்பதாகக் கூறிக் கொள்கிறார். நாங்கள் பாஜகவினரின் தோல்விகளை மக்கள் மன்றத்தில் வைப்போம். ஒரு மாதகாலமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது சிறப்பாக அமைந்திருந்தது.
கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எங்கள் அரசு கொண்டுவந்திருக்கும் அன்னபாக்கியா, இலவச பால் போன்ற திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்தத் திட்டங்களின் பலன்களை மக்கள் அனுபவித்துள்ளனர்.
அதனால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை மக்கள் ஆதரிப்பார்கள். எங்கள் நிர்வாகம் கண்ணாடியை போல மக்கள் மத்தியில் பிரதிபலிப்பதை உணர முடிந்தது என்றார்.