மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 மக்களவை, 2 சட்டப்பேரவை ஆகிய 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெறும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மாநிலத்தில் 3 மக்களவை, 2 சட்டப்பேரவை ஆகிய 5 தொகுதிகளில் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இதில் மண்டியா, பல்லாரி ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி எளிதாக வெற்றி பெறும். சிவமொக்கா தொகுதியில் எங்கள் கூட்டணி சற்று போராடி வெற்றி பெறும்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி, 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பது புரியும். கூட்டணி ஆட்சியில் முதல்வர் குமாரசாமி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார்.
தேசிய வங்கிகளில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து நவம்பரில் முடிவெடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக விரைவில் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து திப்பு சுல்தான் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டும் வழக்கம்போல திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும். பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா முதல்வராக கனவு கண்டு வருகிறார். இதனால் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கனவு ஒரு போதும் பலிக்காது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







