காபிடே உரிமையாளர் சித்தார்த் நீரில் மூழ்கி இறப்பு: தடயவியல் அறிக்கையில் தகவல்
காபிடே உரிமையாளர் சித்தார்த் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது.
மங்களூரில் மாநகரக் காவல் ஆணையர் பி.எஸ்.ஹர்ஷா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபிடே உரிமையாளருமான சித்தார்த் கடந்த ஜூலை 29-ஆம் தேதி தென்கன்னட மாவட்டம் பண்டுவால் அருகே உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. 
இதனையடுத்து ஆற்றில் அவரை தேடும் பணியில் போலீஸார் தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 2 நாள்களுக்குப் பிறகு இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அவரது உடல் மீட்கப்பட்டது. 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
இந்த நிலையில் அவரது தற்கொலை தொடர்பாக வெளியாகியுள்ள தடயவியல் அறிக்கையில், நீரில் மூழ்கியதால், சித்தார்த்தின் நுரையீரலில் தண்ணீர் புகுந்து இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்கொலை, மர்மச்சாவு என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சித்தார்த் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
