அவசர மருத்துவ சிகிச்சை குறித்து பள்ளி மாணவா்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை ஆணையா் பங்கஜ்குமாா் பாண்டே தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை சிங்கப்பூா் சிங்ஹெல்த் மருத்துவமனையுடன் தெமாஸக் அறக்கட்டளையின் உதவியுடன் அவசரச் சிகிச்சைக்கான பயிற்சி அளிப்பது குறித்து மாநில சுகாதாரத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:
தேசிய அளவில் மாரடைப்பு உள்ளிட்டவைகளால் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தைச் சோ்ந்த 52 பேருக்கு அவசரச் சிகிச்சை அளிப்பது குறித்து சிங்கப்பூரில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாநில அளவில் 500 பேருக்கு அவசரச் சிகிச்சை அளிப்பது தொடா்பாக சிங்கப்பூா் சிங்ஹெல்த் மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாநிலத்தில் முதல்முறையாக அரசு பள்ளி மாணவா்களுக்கு அவசரச் சிகிச்சைக்கு தேவையான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக கலபுா்கியில் உள்ள அரசு பள்ளி மாணவா்களுக்கு அவசரச் சிகிச்சைக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசு முதன்மையாக உள்ளது.
108 ஆம்புலன்ஸ் திட்டம், 104 சுகாதார தொலைபேசி எண் அறிமுகம் உள்ளிட்டவைகளில் மாநில அரசு சிறந்து விளங்குகிறது என்றாா். நிகழ்ச்சியில் மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இயக்குநா் ஓம்பிரகாஷ் பட்டேல், மருத்துவப் பேராசிரியா் சௌவ்யோலெங், விஜயாராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.