நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு கெங்கேரி துணை நகரத்தைச் சேர்ந்தவர் வருண் (26). இவரது நண்பர் ஹொசாகுட்டதள்ளியைச் சேர்ந்த ரவி (27). டிராக்டர் ஓட்டுநரான வருணின் மோட்டார் சைக்கிளை ரவி அடகு வைத்திருந்தாராம். அதனை திருப்பித் தருமாறு பல முறை ரவியிடம் வருண் வற்புறுத்தி வந்தாராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வருணை, ரவி சந்திக்கச் சென்றுள்ளார். இரவு 2 பேரும் மது அருந்த சென்ற போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் ரவி தன்னிடமிருந்த கத்தியால், வருணை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த வருண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த பேட்டராயணபுரா போலீஸார், தப்பியோடிய ரவியை தேடி வருகின்றனர்.