பெங்களூரில் நாளை குருபா சமுதாய மாநாடு
By DIN | Published On : 04th January 2019 08:16 AM | Last Updated : 04th January 2019 08:16 AM | அ+அ அ- |

பெங்களூரில் ஜன. 5-ஆம் தேதி குருபா சமுதாய மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், குருபா கலாசார பரிஷத்தின் தலைவருமான எச்.எம்.ரேவண்ணா செய்தியாளர்களிடம் கூறியது:
ஜன. 5-ஆம் தேதி பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் குருபா சமுதாய மாநாடு நடைபெற உள்ளது. இதில் குருபா சமுதாயத்தின் வரலாறு, ஆன்மிகம், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்டவைகளை விளக்கும் வகையிலான 13 தொகுப்புள்ள வரலாற்று புத்தகம் வெளியிடப்படுகிறது. இதனை முன்னாள் முதல்வர் சித்தராமையா வெளியிடுகிறார்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரானந்தபுரி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கனகதாசர் பற்றிய சுயசரிதை நடன நாடகம் இடம்பெறும். பள்ளி மாணவர்கள் ஹரிபக்தசராவின் வசனங்களை ஒப்பிப்பார்கள். மாநாட்டில் குருபா சமுதாயத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். இதுகுறித்து கட்சியின் மேலிடத் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியில் எனக்கு வாய்ப்பளித்தால், நான் வெற்றி பெறுவது உறுதி என்றார்.