முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அதிகாரத்திற்காக அரசியலில் ஈடுபட்டவர் அல்ல என்று கர்நாடக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை நடந்த விழாவில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவம்ஷ்நாராயண்சிங் மற்றும் ரவிதத்தா வாஜ்பாய் ஆகியோர் எழுதியுள்ள சந்திரசேகர்-கொள்கை அரசியலின் கடைசி அடையாளம் என்ற ஆங்கிலநூலை வெளியிட்டு அவர் பேசியது: முன்னாள் பிரதமர் சந்திரசேகர், இந்தியாவின் தலைசிறந்த தலைவர். சந்திரசேகர் என்றைக்கும் அதிகாரத்திற்காக அரசியலில் ஈடுபட்டவர் அல்ல. எப்போதும் மக்களுக்காக அரசியலில் பங்காற்றியவர். சந்திரசேகர் கையாண்ட கொள்கைகள், தத்துவங்கள், அரசியல் அணுகுமுறைகள் தற்காலத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் பொருந்தக் கூடியது. அரசியல் என்றால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றாகிவிட்டது. அரசியல் என்பதே மக்களுக்கானது என்பதை எல்லோரும் மறந்திருக்கிறார்கள். எனவே, மக்களுக்கானதாக அரசியலை மாற்றியமைக்க வேண்டும். இந்த மாற்றம் இயல்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். மக்கள் பங்கேற்கும் அரசியல் நாட்டில் உருவாக வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஜனநாயகம் தழைக்கும். ஆட்சி அதிகாரத்திற்காக அலைந்தவர் அல்ல என்றாலும், நாட்டின் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கினார். எதிர்ப்பே அவரது பெரும் சக்தியாக விளங்கியது. சந்திரசேகர் சிந்தித்த தத்துவங்கள், கொள்கைகளை செயல்படுத்தச் சரியான அமைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், அவரது கொள்கைகள் நமது நாட்டுக்கு அவசியமானதாக உள்ளது. சந்திரசேகர் நடத்திய இந்திய நடைப்பயணம் பல இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்தது. சந்திரசேகரின் பேச்சாற்றல், அவசர காலத்தில் அரசுக்கு எதிராக போராடுவதற்கு பேருதவியாக இருந்தது என்றார் அவர்.
இந்த விழாவில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவம்ஷ் நாராயண்சிங், அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.