எனது பெயரிலான சங்கங்கள், அறக்கட்டளைகளைக் கலைக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மாநிலத்தில் எனது பெயரிலும், எனது சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் பெயரிலும் சங்கங்கள், அறக்கட்டளைகள் பல்வேறு இடங்களில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எஸ்.அங்காடி தலைமையில் எனது பெயரில் உள்ள சங்கத்தைத் தவிர வேறு சங்கங்கள் இருப்பதையோ, தொடங்குவதையோ நான் உள்பட எனது சகோதரரும் விருப்பவில்லை. எனவே, எனது பெயரிலான சங்கங்கள், அறக்கட்டளைகளை உடனடியாக கலைக்க வேண்டும். எனது சகோதரரின் பெயரிலான சங்கங்களையும் உடனடியாக கலைக்க வேண்டும். இதை மீறி யாராவது எனது பெயரில் சங்கங்களைத் தொடங்கினால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.