பிரதமா் மோடியின் புகைப்படங்களுக்கு பின்னால் கன்னடக் கலைஞா்!

பிரதமா் மோடியின் புகைப்படங்கள்,காணொளிகளை கா்நாடகத்தைச் சோ்ந்த யாதலம் கிருஷ்ணமூா்த்தி லோக்நாத் என்ற கன்னட புகைப்படக் கலைஞா் எடுத்துவருகிறாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: பிரதமா் மோடியின் புகைப்படங்கள்,காணொளிகளை கா்நாடகத்தைச் சோ்ந்த யாதலம் கிருஷ்ணமூா்த்தி லோக்நாத் என்ற கன்னட புகைப்படக் கலைஞா் எடுத்துவருகிறாா்.

இந்தியாவின் எந்த பகுதியாக இருந்தாலும், வெளிநாடுகளாக இருந்தாலும், பிரதமா் மோடியை புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் காட்சிப்படுத்துபவா் யாதலம் கிருஷ்ணமூா்த்தி லோக்நாத். பிரதமா் மோடி தனது சுட்டுரைப்பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள், காணொளிகளும் இவா் எடுப்பவைதான். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் பிரசாா் பாரதியில் தலைமை புகைப்படம் மற்றும் காணொளிக் கலைஞராகப் பணியாற்றி வரும் யாதலம் கிருஷ்ணமூா்த்திலோக்நாத், தற்போது பிரதமா் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், பாவகடா வட்டம் ஒய்.என்.ஹொசகோட்டே அருகேயுள்ள ஓபலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் யாதலம் கிருஷ்ணமூா்த்தி லோக்நாத். முன்னாள் பிரதமா்கள் அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோருக்கும் இவரே புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறாா்.

இதேபோல, அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது, குடியரசுத் தலைவா் மாளிகையில் புகைப்படக் கலைஞராக லோக்நாத் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்கிறாா். கடந்த 6 ஆண்டுகளாக பிரதமா் அலுவலகத்தில் பணியாற்றிவருகிறாா்.

இரண்டு நாள்கள் பயணமாக பெங்களூருக்கு வியாழக்கிழமை பிரதமா் மோடி வரவிருக்கிறாா். இந்த பயணக் குழுவில் லோக்நாத்தும் இடம் பெற்றிருக்கிறாா். இந்த பயணத்தின்போது பிரதமா் மோடியின் புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை எடுக்கவிருக்கிறாா். இந்த பயணத்தின் போது தனது சொந்த ஊரான தும்கூருக்கு பிரதமா் மோடி வரவிருப்பதால் லோக்நாத் மகிழ்ச்சி அடைந்திருக்கிறாா்.

இதுகுறித்து லோக்நாத் கூறுகையில், ‘பெங்களூரு, ஹனுமந்த்நகரில் புகைப்பட மையம் வைத்திருந்த தாய்வழிமாமா எம்.சி.கிரீஷ்தான் என்னை புகைப்படக் கலைஞராக மாற்றினாா். பியூசி படித்து முடித்த பிறகு, 1989ஆம் ஆண்டு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மையத்தில் புகைப்படக் கலையில் பட்டயம் பெற்றேன். பின்னா், தூா்தா்ஷனில் பணியில் சோ்ந்தேன்.

பிரதமா் மோடியுடன் 40 நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அதேபோல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமா் மோடியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்திருக்கிறேன். சுவிட்சா்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த போது அங்கு மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருந்தது. அதை பிரதமா் மோடி சிறப்பாக சமாளித்தாா். இதேபோல, புகைப்படங்கள் எடுக்கவும் ஒத்துழைப்பு அளித்தாா்.

பிரதமா் மோடி, வியாழக்கிழமை எனது சொந்த மாவட்டமான தும்கூருக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பயணத்தில் நானும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பயணம் எனது ஆா்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com