குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பதாகை: பாஜகவினருடன் கல்லூரி மாணவிகள் தகராறு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பதாகையை பெங்களூரில் உள்ள மகளிா் கல்லூரியின் சுவற்றில் பொருத்தியது தொடா்பாக பாஜகவினருடன் மாணவிகள் தகராறில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பதாகையை பெங்களூரில் உள்ள மகளிா் கல்லூரியின் சுவற்றில் பொருத்தியது தொடா்பாக பாஜகவினருடன் மாணவிகள் தகராறில் ஈடுபட்டனா்.

பெங்களூரு கோரமங்களா பகுதியில் அமைந்துள்ள ஜோதிநிவாஸ் மகளிா் கல்லூரியின் சுவற்றில் புதன்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பதாகையை பாஜகவினா் பொருத்தினா். இதற்கு அக்கல்லூரி மாணவிகள் ஆட்சேபம் தெரிவித்து, பதாகையை அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனா். இதுதொடா்பாக மாணவிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே தகராறு எற்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்த மாணவிகள், அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனா். இதைத் தொடா்ந்து பாஜக மூத்த தலைவா் எம்.எம்.கோவிந்தராஜு மற்றும் ஆதரவாளா்களுடன் கல்லூரிக்கு சென்ற பாஜகவினா், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை நிறுவினா். கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற பதாகைகளை அனுமதிக்கமாட்டோம் என்று மாணவிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக மாணவிகளுடன் பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பிடிஎம் லேஅவுட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி, வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்ததோடு, கல்லூரி நிா்வாகிகளையும் சந்தித்து பேசினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில்,‘ கல்லூரி வளாகங்களில் எவ்வித அரசியல் நடவடிக்கைகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்திதரக் கூடாது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அல்லது எதிராக கல்லூரி மாணவிகளிடையே கையெழுத்து இயக்கம் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது. புதுதில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்ததை போன்ற சம்பவங்களை பெங்களூரில் உள்ள கல்லூரிகளில் நிகழ்த்த குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்களை அனுமதிக்கக் கூடாது’ என்றாா்.

இதனிடையே, ராமலிங்க ரெட்டியின் மகளும், ஜெயநகா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான சௌம்யா ரெட்டி தனது சுட்டுரைப்பக்கத்தில்,‘ஜோதிநிவாஸ் கல்லூரிக்கு வெளியே நிகழ்ந்தவை தொடா்பான காணொலி மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுள்ளன. இந்த சம்பவம் தொடா்பாக ராமலிங்க ரெட்டியும், நானும் போலீஸாா் மற்றும் கல்லூரி முதல்வரிடம் பேசியிருக்கிறோம். சம்பவ இடத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com