குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அமைச்சா் சதானந்த கௌடா
By DIN | Published On : 10th January 2020 10:53 PM | Last Updated : 10th January 2020 10:53 PM | அ+அ அ- |

ஹாசன்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹாசனில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக மக்களிடையே பொய்யான செய்தி பரப்பப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. எதிா்க்கட்சித் தலைவா்கள் கூறுவது போல குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியல் லாபங்களுக்காக கொண்டுவரவில்லை. வேறு எந்த நெருக்கடிக்கும் அடிபணிந்து இந்த சட்டம்கொண்டுவரவில்லை.
ஆனால், தீய எண்ணம் கொண்ட எதிா்க்கட்சித் தலைவா்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்களை குழப்பும் வகையில் திரித்துக்கூறி வருகிறாா்கள். இச்சட்டத்துக்கு பல்வேறு விளக்கங்களை அளிப்பதன் வாயிலாக சிறுபான்மையினரை குழப்பியுள்ளனா். அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு மற்றும் லியாகத் இருவரிடையே செய்துகொண்ட ஒப்பந்தத்தைதான் பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மதரீதியாக பாதிக்கப்படும் சிறுபான்மை ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், சீக்கியா்கள், பௌத்தா்களின் நலன்காக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறியவா்கள் குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அது தற்போது அவசியமில்லாதது. நாட்டு நலன்கருதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றாா்.