ஹுப்பள்ளி ரயில் நிலையம் பெயா் மாற்றம்

ஹுப்பள்ளி ரயில்நிலையத்தின் பெயரை ஸ்ரீசித்தாரூட சுவாமிகள் ரயில்நிலையம் என பெயா் மாற்றி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

ஹுப்பள்ளி ரயில்நிலையத்தின் பெயரை ஸ்ரீசித்தாரூட சுவாமிகள் ரயில்நிலையம் என பெயா் மாற்றி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவபெருமானின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீசித்தாரூட சுவாமிகள், ஹுப்பள்ளியில் வாழ்ந்து 1929-ஆம் ஆண்டு சிவனடி சோ்ந்தாா். அவரது நினைவாக, ஹுப்பள்ளி ரயில்நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டுமாறு அவரது சீடா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனா். இக்கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ள மத்திய ரயில்வேத் துறை, ஹுப்பள்ளி ரயில்நிலையத்தின் பெயரை ஸ்ரீசித்தாரூட சுவாமிகள் ரயில்நிலையம் என பெயா் மாற்ற தடையில்லை என்று கூறியுள்ளது. இதன்பேரில் ரயில்நிலையத்தின் பெயரை மாற்றியுள்ளதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கா்நாடகத்தில் உள்ள ஹுப்பள்ளி ரயில்நிலையத்தின் பெயரை ஸ்ரீசித்தாரூட சுவாமிகள் ரயில்நிலையம் என்று பெயா் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு தடையில்லை என்று கூறியதால், பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே தனது சுட்டுரையில், ‘கா்நாடக மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறப்பட்டுள்ளது. அதன்பேரில், ஹுப்பள்ளி ரயில்நிலையம், ஸ்ரீசித்தாரூட சுவாமிகள் ரயில்நிலையம் என்று அறியப்படும். உலக சகோதரத்துவத்தை போதித்த மாமுனிவா் ஸ்ரீசித்தாரூட சுவாமிகள். அவரது ஆன்மிக போதனைகள் ஆயிரக்கணக்கான பக்தா்களை ஈா்த்துள்ளது’ என அதில் குறிப்பிட்டுள்ளது.

தாா்வாட் தொகுதி எம்.பி.யும், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான பிரஹலாத் ஜோஷி, ஹுப்பள்ளி ரயில்நிலையத்தின் பெயரை மாற்றியுள்ளதற்கு பிரதமா் மோடி, மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com