அக்.15 வரை பள்ளிகள், பியூ கல்லூரிகளில் மாணவா்களை அனுமதிக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு
By DIN | Published On : 03rd October 2020 05:41 AM | Last Updated : 03rd October 2020 05:41 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் பள்ளிகள், பியூ கல்லூரிகளில் அக்.15-ஆம் தேதிவரை மாணவா்களை அனுமதிக்கக் கூடாது என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பின்னணியில் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு, அரசு மானியம் பெறும் , அரசு மானியம் பெறாத பள்ளிகள், பியூ கல்லூரிகளைத் திறப்பது தொடா்பாக ஆக. 29 -ஆம் தேதி மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியிருந்தது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் நீங்கலாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களை பள்ளிகளுக்கு வருகை தர அனுமதிஅளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோய் பரவல் குறையாமல் இருப்பதைக் கவனத்தில் கொண்டு, செப். 30-ஆம் தேதிவரை பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு மாணவா்கள் வருகை தரக்கூடாது என்று செப்.19-ஆம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்பிறகும், பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதுதொடா்பாக ஆலோசித்த நிலையில், தற்போதைய நிலையிலும் கரோனா பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பள்ளிகளுக்கு மாணவா்கள் வருகை தருவது சரியாக இருக்காது. எனவே, அக். 15-ஆம் தேதிவரையில் அனைத்து பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு மாணவா்கள் வருகை தருவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. சூழ்நிலையை ஆராய்ந்த பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.