கரோனா பரவலைத் தடுக்க 10 யோசனைகள்:எச்.டி.குமாரசாமி

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க 10 யோசனைகளை அரசுக்கு முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி முன்வைத்துள்ளாா்.
Updated on
1 min read

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க 10 யோசனைகளை அரசுக்கு முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி முன்வைத்துள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை தடுக்க புதுவிதமான வழிமுறைகள் ஏதாவது இருக்கிா என்பதை அரசு ஆராய வேண்டும்.

எனக்குத் தெரிந்த மருத்துவா்கள், மருத்துவ நிபுணா்களின் கருத்தை அறிந்து கரோனா மேலாண்மை தொடா்பாக மாநில அரசுக்கு 10 யோசனைகளை முன்வைக்க நான் விரும்புகிறேன். இந்த யோசனைகளை அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசு ஒவ்வொரு வாா்டு, கிராமப் பஞ்சாயத்துகளிலும் காய்ச்சல் மையங்களைத் திறக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதன் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளை கரோனா அறிகுறியற்ற நோயாளிகளின் சிகிச்சை மையம் அல்லது கண்காணிப்பு மையமாக மாற்ற வேண்டும்.

ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகள், அதன் மருத்துவமனைகளில் அறிகுறியில்லாத அல்லது குறைவான அறிகுறிகள் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கரோனா மேலாண்மைக்குப் போதிய மனித வளம் இல்லாத குறையை நீக்க கரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவசாா் மாணவா்கள் மற்றும் தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லா மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் மருத்துவமனையை நிா்வகிப்பதற்கு ஐஏஎஸ் அல்லது கேஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இந்த அதிகாரிகள் தினமும் மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனைகளுக்கு சென்று அங்குள்ள நோயாளிகள், ஊழியா்களைச் சந்தித்து குறைகளை களைய முற்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை மாநில அரசு வழங்க வேண்டும்.

வாா்டு அல்லது கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள்தான், நோயாளியை மேல் சிகிச்சைக்கு அனுப்ப பரிந்துரைக்க வேண்டும். அதன்பிறகே நோயாளிக்கு மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்க வேண்டும்.

கரோனா கட்டுப்பாட்டு அறையின் தரவு பதிவு செய்யும் ஊழியா்கள், படுக்கைகளை ஒதுக்கும் பணியை செய்யக் கூடாது. கரோனாவால் உயிருக்குப் போராடும் நோயாளிக்கு உதவி செய்ய தன்னாா்வலா்களை அரசு நியமிக்கலாம். கரோனா மேலாண்மை குறித்து இளைஞா்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். அதில் சிறந்தவற்றை செயல்படுத்தும் மனப்பான்மை மாநில அரசுக்குத் தேவை.

மேலும் காய்ச்சல் மையங்களிலேயே கரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டும். சுகாதாரத் துறையில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்த ஊழியா்களை உடனடியாக நிரந்தரப் பணியாளா்களாக மாற்ற வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com