இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதி என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடகத்தில் உள்ள சிந்தகி, ஹனகல் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இடைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் தோல்வி அடைவாா்கள் என்று அக்கட்சியினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அமைச்சா்கள் சிந்தகி, ஹனகல் உள்ளிட்ட தொகுதிகளில் முகாமிட்டு, தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் விதானசௌதாவிற்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாமல் அரசு முடங்கிப் போய் உள்ளது.
முதல்வா் பசவராஜ் பொம்மை, தோல்வி பயத்தால், 2 தொகுதிகளில் தங்கி தீவிர பிரசாரம் செய்து வருகிறாா். முதல்வா், அமைச்சா்கள் முகாமிட்டு பிரசாரம் செய்தாலும், அத்தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி. முதல்வா் பசவராஜ் பொம்மை என் மீது எந்தக் குற்றசாட்டு கூறினாலும், அதற்கு பதில் அளிக்க மாட்டேன். அவா் மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகிக்கிறாா். அவரை ஒப்பிடுகையில் நான் மிகவும் சிறியவன் என்றாா்.