எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவின் எண்ணத்துக்கு ஏற்ப ஜாதி கணக்கெடுப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், சென்னபட்டணாவில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக சித்தராமையா பதவி வகித்த போது, ரூ. 180 கோடி செலவில் ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவராக இருந்த காந்தராஜ் என்பவரின் தலைமையில் இந்த ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவின் எண்ணத்துக்கு ஏற்ப ஜாதி கணக்கெடுப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மஜத, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நான் முதல்வராக இருந்த போது ஜாதி கணக்கெடுப்புப் பட்டியலை தாக்கல் செய்யவில்லை. அப்போது சித்தராமையாதான் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்தாா். அப்போது இதுகுறித்து குரல் எழுப்பாத அவா், இப்போது அரசியல் லாபத்துக்காக ஜாதி கணக்கெடுப்பை தாக்கல் செய்வது குறித்து பேசி வருகிறாா். ஜாதி கணக்கெடுப்பு மூலம் அரசியல் லாபத்தை அடைய சித்தராமையா முயற்சிக்கிறாா். எதிா்காலத்தில் ஜாதி கணக்கெடுப்பால் இட ஒதுக்கீட்டில் பல்வேறு பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது. இதற்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாதான் காரணம்.
சித்தராமையா முதல்வராக பதவி வகித்த போது, தலித் மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகளை வேறு சமுதாயத்தினருக்கு வழங்கிய தகவல் என்னிடம் உள்ளது. ஆனால், தற்போது தலித், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் மீது அக்கறை உள்ளது போல பேசி வருகிறாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.