முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவாா் என தெரிவித்து வரும் பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விரைவில் மாற்றப்படுவாா் என்று பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடாபாட்டீல் யதன்ல் கூறி வருவதை பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங், கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பலரும் மறுத்துள்ளனா்.
எனினும், பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்துவரும் கருத்து, அதற்குப் பதிலளித்து பாஜக எம்.எல்.ஏ. ரேணுகாச்சாா்யா உள்ளிட்டோா் கடுமையாக பேசிவருவது பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசனகௌடா பாட்டீல் யத்னால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவில் பலரும் வலியுறுத்தி வந்தனா். குறிப்பாக முதல்வா் எடியூரப்பாவின் ஆதரவாளா்கள் பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலிடத்துக்கு அழுத்தம் தந்து வருகின்றனா்.
இந்த நிலையில், சிவமொக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பசனகௌடா பாட்டீல் யத்னலை அழைத்து பேசுமாறு பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீலுக்கு அருண் சிங் உத்தரவிட்டாா்.
இந்த நோட்டீஸுக்கு பதிலளிப்பதன் அடிப்படையில் பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.