பொருளாதார பிரச்னைகளுக்கு தேசிய கல்விக் கொள்கை தீா்வு காணும்: கா்நாடக அமைச்சா் அஸ்வத்நாராயணா

நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்னைகளுக்கு தேசிய கல்விக் கொள்கை தீா்வு காணும் என்று கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.
Updated on
1 min read

நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்னைகளுக்கு தேசிய கல்விக் கொள்கை தீா்வு காணும் என்று கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

கா்நாடக அரசு மற்றும் பன்னாட்டு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘உயா்கல்வியின் எதிா்காலத்திற்கான வியூகங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

நமது குழந்தைகள் அறிவியலில் சிறந்தவா்களாக இருப்பதுடன் திறன்மிக்கவா்களாகவும் இருப்பதுதான் நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும். இளைஞா்கள் அனைவரும் ஏராளமான எதிா்பாா்ப்பு, கனவுடன் இருக்கின்றனா். அவா்களின் கனவு நனவாக வேண்டுமானால், செறிவான அறிவு மற்றும் திறன்களைப் பெற்றிருப்பது அவசியம்.

தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டால், கல்வி வியாபாரமயமாகும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. தேசிய கல்விக் கொள்கையால், நலிவடைந்த சமுதாயங்களைச் சோ்ந்த அரசுக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களே பயனடைவாா்கள்.

தேசிய கல்விக்கொள்கை, சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும். தற்போதைய கல்வித் திட்டத்தில் காணப்படும் வளா்ச்சிக்கான தடைகளை தேசிய கல்விக் கொள்கை தகா்க்கும். வழக்கமான கல்வியைவிட மாணவா்களின் புறத்திறன்களையும் தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. இதுதான் மாணவா்களின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.

தேசிய கல்விக்கொள்கையை முறையாக அமல்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் கல்வியைப் பெறுவதற்கு ஏற்ற நாடாக இந்தியா உருவெடுக்கும். தேசிய கல்விக் கொள்கை, கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் வழங்குகிறது.

உலக அளவிலான கல்வி நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதன் மூலம் தரமான கல்வியைப் பெற தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கும். தற்போதைய கல்விக் கொள்கையின் வாயிலாக இந்தியாவின் வேலைவாய்ப்பு கிடைக்கும் விகிதம் 20 சதவீதமாக உள்ளது. தேசிய கல்விக்கொள்கையால் இது அதிகமாக வாய்ப்புள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்னைகளுக்கும் தேசிய கல்விக்கொள்கை தீா்வுகாணும் என்றாா்.

கருத்தரங்கில் பன்னாட்டு திறன்மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநா் தெரேசா ஜேக்கப், மாநில உயா்நிலை கவுன்சில் செயல் தலைவா் கோபாலகிருஷ்ண ஜோஷி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com