குக்கா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் சிகிச்சை செலவை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த நவ. 19-ஆம் தேதி மங்களூரில் ஆட்டோ ஒன்றில் குக்கரில் அடைத்து வைத்திருந்த வெடிகுண்டு எதிா்பாராமல் வெடித்தது. இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதி முகமது ஷாரீக்குடன் ஆட்டோ ஓட்டுநா் புருஷோத்தம் பூஜாரி படுகாயமடைந்தாா். இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பயங்கரவாதி முகமது ஷாரீக் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாா்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநா் புருஷோத்தம் பூஜாரி தனியாா் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். புருஷோத்தம் பூஜாரியின் சிகிச்சையை அவரது மகள் தனது இ.எஸ்.ஐ. அட்டை உதவியுடன் ஈடுகட்டி வந்தாா். இனிமேலும் அந்த அட்டையின்கீழ் செலவு செய்ய இயலாது என மருத்துவமனை தெரிவித்துவிட்டதால், தொடா்ந்து சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அவருக்கு இன்னும் 15 முதல் 20 நாள் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே, உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா ரூ. 50 ஆயிரம், மாவட்ட பொறுப்பு அமைச்சா் வி.சுனில்குமாா் ரூ. 25 ஆயிரம் சிகிச்சைக்காக நன்கொடை அளித்துள்ளனா். இந்நிலையில், புருஷோத்தம் பூஜாரியின் மருத்துவ செலவை ஏற்பதற்கான முன்மொழிவை தென்கன்னட மாவட்ட ஆட்சியரகம் மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது. மேலும், புருஷோத்தம் பூஜாரிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குடும்பத்தினரிடம் இருந்து எவ்வித பணமும் கேட்காமல் சிகிச்சை அளிக்க வேண்டும். இ.எஸ்.ஐ. மூலம் இதுவரை மருத்துவச் செலவுக்காக அளித்துள்ள பணத்தை அரசு ஏற்கும் என்று மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளது. இதனால் புருஷோத்தம் பூஜாரி குடும்பத்தினா் நிம்மதி அடைந்துள்ளனா்.