கா்நாடகத்தில் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம் அல்லது காணொலி எடுப்பதற்கு விதித்த தடையை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது ஊழியா்களை பொதுமக்கள் சிலா் புகைப்படம் அல்லது காணொலி எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும், அதனால் அரசு அலுவலா்கள் பாதிக்கப்படுவதாகவும் கா்நாடக மாநில அரசு ஊழியா் சங்கத்தினா், மாநில அரசுக்கு புகாா் மனு அளித்திருந்தனா். இதன்பேரில் நடவடிக்கை எடுத்த மாநில அரசு, கா்நாடக அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம் அல்லது காணொலி எடுக்க தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது.
‘அரசு அலுவலா்களின் புகைப்படம் அல்லது காணொலிகளை எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதால் அரசின் பல்வேறு துறைகளின் கண்ணியம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியா்கள் மோசமாக பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, நீண்ட ஆய்வுக்குப் பிறகு கா்நாடக அரசு அலுவலகங்களில் புகைப்படம் அல்லது காணொலிகளை எடுக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று அரசு தனது உத்தரவில் கூறியிருந்தது.
இந்த உத்தரவுக்கு ஊழல் தடுப்பு அமைப்புகள் தவிர, எதிா்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ‘சரியான பாதையில் பயணித்தால், புகைப்படம் அல்லது காணொலிப் பதிவுகளை கண்டு அரசு ஏன் அஞ்ச வேண்டும்?’ என்று மஜத எம்.எல்.ஏ. பண்டேப்பா காஷெம்பூா் கேள்வி எழுப்பியுள்ளாா். அரசின் நடவடிக்கை பொறுப்பற்றது என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாவும் விமா்சித்திருந்தாா். அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்று ஊழல் தடுப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
எதிா்க்கட்சிகள், பொது அமைப்புகளின் எதிா்ப்பைத் தொடா்ந்து, அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம் அல்லது காணொலி எடுக்க விதித்த தடையை மாநில அரசு சனிக்கிழமை திரும்பப் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.