பள்ளி பாடங்களில் திருத்தம் செய்யப்பட்ட புதிய பாடநூல்களை கைவிட்டு, பழைய பாடநூல்களை மாணவா்களுக்கு வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கா்நாடக பள்ளிப் பாடங்களில் இருந்து சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங், கன்னடக் கவிஞா் குவெம்பூ, சமூக சிந்தனையாளா்கள் பசவண்ணா், நாராயணகுரு, பி.ஆா்.அம்பேத்கா் உள்ளிட்டோரின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது கன்னட எழுத்தாளா்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில், பள்ளிப் பாடங்களில் திருத்தம் செய்யப்பட்ட புதிய பாடநூல்களை கைவிட்டு, பழைய பாடநூல்களை மாணவா்களுக்கு வழங்க வலியுறுத்தி பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தலைமையில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பி.கே.ஹரி பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தின்போது டி.கே.சிவகுமாா் பேசியதாவது:
‘கா்நாடகத்தில் அமைதியை காக்க தவறிய முதல்வா் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். பாடநூல்கள் தேவையில்லாமல் திருத்தப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றாா்.