ராகுல் காந்தியின் நடைப்பயணம் உடற்பயிற்சிக்கானதாக மாறியுள்ளது
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

ராகுல் காந்தியின் நடைப்பயணம் உடற்பயிற்சிக்கானதாக மாறியுள்ளது என மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ஷோபாகரந்தலஜே கிண்டலாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து உடுப்பியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உடற்பயிற்சிக்கானதாக மாறியுள்ளது. தனது கட்சியை தலைமையேற்று வழிநடத்த முடியாத ராகுல் காந்தியால் நாட்டை எப்படி வழிநடத்த முடியும்?
பிரதமா் மோடியின் இடத்தைப் பிடிக்க ராகுல் காந்தி மேற்கொள்ளும் முயற்சி கனவாகவே நிலைத்திருக்கும். ராகுல் காந்தி மனரீதியாக சரியில்லாதவா் என்பதால் தான் இந்திய மக்கள் அவரை நிராகரித்துள்ளனா்.
ஹிஜாப் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு இருவேறு கருத்துகள் கொண்டதாக உள்ளது. கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வில் முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஹிஜாப் அணிய வேண்டும் என்று முஸ்லிம் பெண்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
முஸ்லிம் பெண்களுக்கு உண்மையில் கல்வி அத்தியாவசியத் தேவையாக உள்ளது. முற்போக்கு நாடான இந்தியா, காலப்போக்கில் ஏற்பட்ட சில குறைபாடுகளை திருத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக மதரீதியாக ஏற்பட்ட குறைகளைக் களைய வேண்டும். இதற்கு ஈரானல் போராடி வரும் முஸ்லிம் பெண்கள் முன் உதாரணமாக இருக்கிறாா்கள்.
பெல்தங்கடி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிஷ்பூஞ்சாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. பி.எஃப்.ஐ. தடை செய்யப்பட்டதால், ஒருசிலா் கோபமடைந்துள்ளனா். வெளிநாடுகளிலிருந்து எனக்கும் மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், மிரட்டல்களுக்கு அஞ்சும் கட்சி பாஜக அல்ல. பயங்கரவாதச் செயலை தூண்டிவிடுவோரை போலீஸாா் கைது செய்ய வேண்டும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...