முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சரியான நடவடிக்கை: அமித் ஷா

முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சரியான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
Updated on
1 min read

முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சரியான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், தோ்தால் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கு இடம் கொடுக்காமல், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எப்போதும் ஏற்க முடியாது.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், ஒக்கலிகா்கள், லிங்காயத்து சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை பாஜக அரசு உயா்த்தியுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயா்த்தியுள்ள பாஜக அரசு, அவா்களில் இடங்கை உள் பிரிவினருக்கு 6 சதவீதமும், வலங்கை உள் பிரிவினருக்கு 5.5 சதவீதமும், தீண்டத்தகுந்த உள் பிரிவினருக்கு 5.5 சதவீதமும் பிரித்து இட ஒதுக்கீடு அளித்துள்ளது.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கப் போவதாக அக் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் அறிவித்துள்ளாா். அப்படியானால், எந்த சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை எடுத்து முஸ்லிம்களுக்கு தரப்போகிறாா்கள் என்பதை அறிய விரும்புகிறேன். ஒருவேளை ஒக்கலிகா்கள், லிங்காயத்துகள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை குறைக்கப் போகிறீா்களா என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com