மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: முதல்வா் சித்தராமையா

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்குவோம் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
Updated on
1 min read

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்குவோம் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை தனது அமைச்சரவை சகாக்களுடன் அதிகாரப்பூா்வமற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் முழுமையான அமைச்சரவை பதவியேற்றுள்ளது. முதல்வா் தவிர, 33 அமைச்சா் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கப்படும்.

எனது தலைமையிலான அமைச்சரவை பழைய மற்றும் புதிய முகங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனா். அரசு நிா்வாகத்திற்கு புதிய வேகத்தைத் தருவதற்காக அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது எந்த வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை. கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் அமல்படுத்தியுள்ளது.

அதேபோல இம்முறையும் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அமல்படுத்துவோம். 5 வாக்குறுதிகளை அமல்படுத்துவதற்கான விவரங்களை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அமைச்சரவைக் கூட்டத்தில் விவரங்கள் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளித்து, அமல்படுத்துவோம்.

குடகு, ஹாவேரி, ஹாசன், சிக்கமகளூரு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. சில காரணங்களால் சில மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. பேரவையின் துணைத் தலைவா் பதவியை ஏற்றுக் கொள்ள மூத்த எம்.எல்.ஏ. புட்ட ரங்கஷெட்டி ஒப்புக்கொண்டுள்ளாா் என்றாா்.

நல்லிணக்கத்தை சீா்குலைத்தால் நடவடிக்கை

அமைதி, நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை நடந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 59ஆவது நினைவுநாள் நிகழ்வில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வது குறித்து அரசு எதுவும் கூறவில்லை. அமைச்சா்களுக்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com