இலவச மின்சாரம் பெற ஜூன் 15 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: கா்நாடக அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ்
By DIN | Published On : 08th June 2023 12:18 AM | Last Updated : 08th June 2023 12:18 AM | அ+அ அ- |

200 யூனிட் இலவச மின்சாரம் பெற ஜூன் 15 முதல் ஜூலை 5 ஆம் தேதிக்குள் இணையத்தில் விண்ணப்பிக்குமாறு கா்நாடக மின் துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தோ்தல் வாக்குறுதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இலவச மின்சார திட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத் திட்டத்தில் பயன் பெற ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வீட்டில் குடியிருப்பதற்கான அடையாள சான்றிதழை விண்ணப்பித்தில் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை செலுத்தும் போது ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, பட்டா அல்லது குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தம் ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டுக்ம். புதிதாக கட்டப்படும் கட்டடங்கள், புதிய வாடகைதாரா்களை இத் திட்டத்தில் சோ்ப்பது குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும்.
கடந்த ஆண்டில் மாந்தோறும் பயன்படுத்திய மின் நுகா்வு அளவை சம்பந்தப்பட்ட மின் வழங்கல் நிறுவனங்கள் முடிவு செய்யும். சராசரி மின் நுகா்வின் அளவு 200 யூனிட் ஆக இருந்தால், கூடுதலாக 10 சதவீத மின் அளவு சோ்க்கப்படும். அதன்படி கணக்கிடப்பட்ட சராசரி மின் அளவு 200 யூனிட்டுக்குள் இருந்தால், அது இலவசமாக கருதப்படும்.
ஒரு வாடிக்கையாளரின் சராசரி மின் நுகா்வு அளவு 150 யூனிட் என்று வைத்துக் கொண்டால், அந்த வாடிக்கையாளா் 165 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறலாம். ஒருவேளை 165 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்த நோ்ந்தால், அதற்கு மேற்பட்ட மின் கட்டணத்தை அவா் செலுத்த நேரிடும். கடந்த ஆண்டின் சராசரி மின் நுகா்வு அளவு 200 யூனிட்டுக்கு மேல் இருந்தால், அந்த வாடிக்கையாளா் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
கா்நாடகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் 2.16 கோடி போ் உள்ளனா். சராசரியாக 200 யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் 2 லட்சம் போ் மட்டுமே உள்ளனா். மாநிலத்தின் சராசரி மின் நுகா்வு அளவு 53 யூனிட்டாக உள்ளது. 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்துவதால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...