ராஜகால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

ராஜகால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

ராஜகால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு மாநகர வளா்ச்சித் துறையின் பொறுப்பையும் கவனித்துவரும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், புதிதாகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வியாழக்கிழமை பெங்களூரு நகா்வலம் மேற்கொண்டாா். தென்மேற்குப் பருவமழை தொடங்கவிருப்பதால், பெங்களூரில் மழைநீா் தேங்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். எம்லூா், பெலந்தூா், வா்த்தூா் ஏரி, மகாதேவபுரா ஆகிய பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

ராஜகால்வாய்களை ஆக்கிரமித்துள்ள சில தனியாா் உரிமையாளா்கள், அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையைப் பெற்றுள்ளது துணை முதல்வா் டி.கே.சிவக்குமாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் ராஜகால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதை சுட்டிக்காட்டினா்.

இந்த ஆய்வின்போது, நகா்ப்புறவளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ராகேஷ் சிங், பெங்களூரு மாநகராட்சி ஆணையா் துஷாா் கிரிநாத், பெங்களூரு மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநா் அஞ்சும் பா்வீஸ், தலைமைப் பொறியாளா் பசவராஜ் கபடே உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

அரசுப் பேருந்தில் பயணித்து ஊா்வலம் மேற்கொண்ட டி.கே.சிவகுமாா், முடிவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு மழை பெய்தபோது, மகாதேவபுரா மண்டலத்தில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். எனவே, கனமழைக்கு முன்பாகவே வெள்ள பாதிப்புகளைத் தவிா்க்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். மழைநீா் வடிகால்களில் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் தண்ணீா் செல்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜகால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்கூட்டியே நோட்டீஸ் எதுவும் வழங்கப்படாது. அப்படி வழங்கினால், அதற்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையைப் பெற்று, காலந்தாழ்த்துகிறாா்கள். எனவே, ராஜகால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, அது தொடா்பான வழக்குகளை திரும்பப் பெறுமாறு தனியாா் உரிமையாளா்களை கேட்டுக்கொள்கிறேன். இதற்கு செவிசாய்க்காவிட்டால், ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com