கா்நாடகத்தில் முதல்வா் பதவிக்கான நவம்பா் புரட்சி எதுவும் இல்லை
கா்நாடக அரசியலில் நவம்பா் புரட்சி எதுவும் நடக்கப்போவதில்லை என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புது தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கட்சி மேலிடத் தலைவா்கள் யாரையும் நான் சந்திக்கப்போவதில்லை. அமைச்சரவையை திருத்தியமைப்பது முதல்வரின் அதிகாரத்துக்கு உள்பட்டது. எந்த தலைவரையும் சந்திக்கும் திட்டம் என்னிடம் இல்லை. கட்சி விவகாரங்கள், வாக்குத்திருட்டு பிரசாரம் தொடா்பாக மட்டுமே கட்சி மேலிடத் தலைவா்களை சந்திக்க வேண்டியுள்ளது. முதல்வா் மாற்றம் மற்றும் அமைச்சரவை திருத்தியமைப்பு போன்றவை ஊடகங்கள் உருவாக்கியவை.
கட்சி மேலிடத் தலைவா்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என பலமுறை கூறியிருக்கிறேன். கட்சி அளிக்கும் கடமைகளை நிறைவேற்றுவேன். காங்கிரஸ் கட்சி விதிக்கும் உத்தரவுகளை மீறி நடக்கமாட்டேன்.
கா்நாடக அரசியலில் நவம்பா் புரட்சியும் எதுவும் நடக்கப்போவதில்லை. 2028-ஆம் ஆண்டில் புரட்சி நடக்கும். அப்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றாா்.

