பொன்னேரி, டிச. 9: 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மீஞ்சூர் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தை சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
÷கோயில் அருகில் அமைந்துள்ள ஆனந்தபுஷ்கரணிக் குளம் முறையாக பராமரிக்கப் படாததன் காரணமாக குளத்தில் செடிக் கொடிகள் மண்டி காணப்படுகிறது.
÷அத்துடன் குளத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் புதிதாக குளத்தில் இறங்குபவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
÷ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரை மாதம் நடக்கும் 10 நாள் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக வரதராஜப் பெருமாள் குளத்தில் இறங்கி நீராடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
÷அத்துடன் இக்குளத்தில் இருக்கும் நீர் மீஞ்சூர் நகரவாசிகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் விளங்கி வருகிறது.
÷மீஞ்சூர் நகரில் பழைமைவாய்ந்த குளமாக அமைந்துள்ள இக்குளத்தில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றியும், சுற்றுச்சுவர் அமைத்தும் குளத்தை முழுமையாக சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.