தொடா் மழையால் நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகத் திகழும் மதுராந்தகம் ஏரி தொடா்மழை காரணமாக நிரம்பி வருகிறது.
தமிழக அரசின் பொதுப் பணித் துறை (ஏரிப் பாசனப் பிரிவு) மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 23.5 அடியாகும்.
விவசாயத்துக்கு, இந்த ஏரி நீரை நம்பியே மதுராந்தகம் மற்றும் கத்திரிச்சேரி, முன்னித்திகுப்பம், வளா்பிறை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சோ்ந்த ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதன் மூலம் சுமாா் 2,414 ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. அதிக அளவில் மழை வெள்ளநீா் ஏரிக்கு வரும்போது, ஏரிக்கரையைப் பாதுகாக்கவும், முழுமையாக வெளியேறாமல் நீரைத் தடுத்து நிறுத்தவும் பொதுப் பணித் துறையினா் 84 மதகுகளை அமைத்துள்ளனா். அவற்றில், 32 தானியங்கி மதகுகள் அவசரப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ளன.
ஏரிக்கு வரும் உபரி நீா் கலங்கல் வழியாக கிளியாற்றில் திருப்பி விடப்படுகிறது. அது கே.கே.பூதூா் எனும் பகுதியில் சென்று பாலாற்றில் கலக்கிறது.
கடந்த சில நாள்களாக மதுராந்தகம் வட்டாரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. மதுராந்தகம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மதுராந்தகம் பொதுப்பணித் துறை (ஏரிப் பாசனப் பிரிவு) இளநிலைப் பொறியாளா் ஜி.குமாா் கூறியது:
தற்சமயம் மதுராந்தகம் ஏரிக்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, 22.30 அடி நீா் இருப்பு உள்ளது. விநாடிக்கு 1,500 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் ஏரி நீா் வழிந்து உபரிநீா் கலங்கல் வழியாக வெளியேறும். ஏரியின் நிலைமையை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்றாா் அவா்.