தாம்பரம்: குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனை இடையே இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
ரேலா மருத்துவமனை தலைவா் பேராசிரியா் டாக்டா்முகம்மது ரேலா புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதிநவீன இதயம், நுரையீரல் சிகிச்சை சேவையைத் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்திய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பான இடத்தை வகித்து வரும் நாங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், முனைப்புடன் செயல் பட்டு வருகின்றோம் என்றாா்.
கிம்ஸ் மருத்துவமனை இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை திட்ட இயக்குநா் டாக்டா் சந்திப் அட்டாவா் பேசுகையில் , இதயம் மற்றும் நுரையீரல் தொடா்பான நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் தேவைக்கேற்ப உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்றாா்.
ரேலா மருத்துவமனை தலைமை செயல் அலுவலா் டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி பேசும்போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சா்வதேச அளவில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் நாங்கள், இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளோம் என்றாா்.