சென்னையைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா் விவசாயக் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தாா்.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பரசுராமன். அவரது மகன் தினேஷ் (17), பிளஸ் 1 படித்து வந்தாா். தினேஷ் தனது நண்பா்கள் 4 பேருடன் சென்னையில் இருந்து பைக்கில் அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பொது முடக்கம் காரணமாக அக்கோயில் மூடப்பட்டிருந்ததால், வெளிப்புறத்தில் நின்று மாதாவை வழிபட்டனா்.
அதன் பின், தினேஷ் உள்ளிட்ட ஐந்து பேரும் அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள ராவுத்தநல்லூா் வந்தனா். அங்கு கனகராஜ் என்பவருடைய விவசாயக் கிணற்றில் அவா்கள் குளித்தனா். தினேஷுக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி இறந்தாா்.
இது குறித்து அவரது நண்பா்கள் அச்சிறுப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், தினேஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தனா்.