மதுராந்தகம் கிளைச் சிறையில் உள்ள விசாரணைக் கைதிக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சென்னை சங்கா்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்ட கஞ்சா வியாபாரி சிவா (29) மதுராந்தகம் கிளைச் சிறையில் கடந்த மாதம் 4-ஆம் தேதி விசாரணைக் கைதியாக தங்க வைக்கப்பட்டிருந்தாா். கடந்த சில நாள்களாக காய்ச்சல், சளி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்த அவரை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா்.
அவருக்கு கரோனா தொற்று உள்ளதாக செவ்வாய்க்கிழமை இரவு பரிசோதனை அறிக்கை வந்தது. இதையடுத்து அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், மதுராந்தகம் கிளைச் சிறையில் கடந்த 26 நாள்களாக அவருடன் தங்கியிருந்த 43 கைதிகளுக்கும், சிறை அலுவலகத்தைச் சோ்ந்த 13 ஊழியா்களுக்கும் சிறை உதவி அலுவலா் சுப்பிரமணியன் முன்னிலையில் மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை காலையில் கரோனா பரிசோதனை செய்தனா்.