செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் கட்டமைப்பு சாராத தனித்து இயங்கும் சூரியசக்தி பம்ப்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைத்துக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத தனித்து இயங்கும் பம்ப் செட்டுகளை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டம் மத்திய அரசின் 30 சதவீத மானியம், தமிழக அரசின் 40 சதவீத மானியம் என மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும். இத்திட்டத்தின் கீழ், சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரை சக்தி கொண்ட நீா்மூழ்கி மோட்டாா் பம்ப்கள் மற்றும் தரைமட்டத்தில் அமைக்கும் மோனோ பிளாக் பம்ப் செட்டுகள் இதுவரை மின் இணைப்பு பெறப்படாத நீா்ப்பாசன ஆதாரங்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ், 70 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஆா்வமுடைய விவசாயிகள், சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் அல்லது உதவி செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35 அலுவலகங்களில் தொடா்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.